திரையரங்குகள் திறக்க அனுமதி: முதலமைச்சருக்கு நன்றி கூறிய இயக்குனர் பாரதிராஜா

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (16:29 IST)
தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த முதலமைச்சர்‌ மாண்புமிகு திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்களுக்கு எங்கள்‌ நன்றிகள்‌! வணக்கம்‌.
 
'கடந்த இரண்டு ஆண்டுகளை திரையுலகின்‌ கருப்பு நாட்களாகிவிட்டது இந்த கொரானா. படப்பிடிப்பு, புதிய திரைப்படங்கள்‌ வெளியீடு என எல்லாம்‌ பெருமளவில்‌ முடங்கிவிட்டது. நிச்சயமற்ற எதிர்காலத்தில்‌ நம்பிக்கை பூக்குமா என்ற கேள்விக்‌ குறியோடு நகர்ந்த நாட்களில்‌ இப்போது திரையரங்குகளை 29.8.2021 முதல்‌ 50% இருக்கைகளோடு திறந்துகொள்ளலாம்‌ என தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியையும்‌, நம்பிக்கையையும்‌ விதைக்கிறது.
 
ஆக்கிரமித்து ‌இருக்கும்‌ நோய்‌ விலகி, பல புதிய திரைப்படங்கள்‌ வெளியாக, திரையரங்குகள்‌ முழுமையான திருவிழாக்‌ கோலம்‌ காண காத்திருக்கிறோம்‌.
 
'திரையரங்கு உரிமையாளர்கள்‌, தயாரிப்பாளர்கள்‌ நிம்மதிப்‌ பெருமூச்சு விட வைத்த ஒரு அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர்‌ திரு. மு க ஸ்டாலின்‌ அவர்களுக்கு தமிழ்த்‌ திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ சார்பாக நன்றிகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்