பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து கூறியபோது, பெண்கள் பாதுகாப்புக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? மாநிலம் முழுவதும் சிசிடிவி கேமரா அமைக்க எவ்வளவு நிதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இந்த பட்ஜெட் உண்மையில் வெற்று பட்ஜெட். எந்த முன்னேற்றத்திற்கும் வழிவகுக்காத பட்ஜெட். இந்த பட்ஜெட்டில் தென் மாவட்டங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு தென் மாநிலங்களை புறக்கணிக்கிறது என்று குற்றம் சொல்லும் தமிழக அரசு, தனது பட்ஜெட்டில் டெல்டா மாவட்ட மக்களின் பயனுக்காக ஒரு திட்டம்கூட கொண்டு வரவில்லை. முதல்வர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
பெண்கள் பாதுகாப்புக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? மாநிலம் முழுவதும் சிசிடிவி கேமரா அமைக்க எவ்வளவு நிதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது? சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவதாக கூறினர், அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா?
பெண்களின் பயணச்சலுகை மட்டும் முன்னேற்றத்திற்கான தீர்வாகாது. இலவசங்களை கொடுத்தாலே வாழ்வாதாரம் மேம்படும் என நினைக்கிறார்கள். ஆனால் கல்வித் துறைக்கு உண்மையில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? பெண்கள் முன்னேறுவதற்கான திட்டங்கள் எங்கே?
பென்ஷன் திட்டம், மின்சார கட்டண உயர்வுக்கு தீர்வு, மக்கள் நலத்திட்டங்கள் என எந்த முக்கியமான அம்சமும் இதில் இல்லை. 2026 தேர்தலை தீர்மானிக்கப் போவது மது ஊழலும், மணல் கொள்ளையும் தான். இது ஒரு வெற்று அரசு, வெற்று நிதிநிலை அறிக்கையை கொண்டு வந்துள்ளது. இது முற்றிலும் பயனற்ற பட்ஜெட்" என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.