இஸ்ரேல் மீது வீசப்படும் ஏவுகணைகள்.. இந்திய மாணவர்கள் அச்சத்துடன் வெளியிட்ட வீடியோ..!

Siva
வியாழன், 3 அக்டோபர் 2024 (15:52 IST)
இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசப்படுவதாக அங்கு படித்து வரும் இந்திய மாணவர்கள் தங்கள் உறவினர்களுக்கு இந்த வீடியோ மூலம் அச்சத்துடன் தகவல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ் நகரில் இந்திய மாணவர்கள் பலர் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்; அதேபோல், இந்திய தொழிலாளர்களும் சிலர் அங்கு வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஐதராபாத் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த இந்திய மாணவர்கள் ஏவுகணை தாக்குதலை கண்டு அச்சமடைந்திருப்பதாகவும், அது குறித்த வீடியோவை தங்கள் உறவினர்களுக்கு வெளியிட்டு உருக்கமாக பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

“எங்களுக்கு மிகவும் அச்சமாக இருக்கிறது. இந்த தாக்குதல் நாளுக்கு நாள் எங்கள் மத்தியில் பயத்தை அதிகரித்து வருகிறது. இங்கு நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. இதுபோன்ற தாக்குதல்களை நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. எங்கள் நகருக்குள் ஏவுகணைகள் வந்து விழுந்து விடும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்