மீண்டும் வெற்றிப்பாதையில் கோலிவுட் திரையுலகம்.. மூன்று படங்கள் தொடர் வெற்றி..!

Siva
வெள்ளி, 14 ஜூன் 2024 (15:07 IST)
கடந்த சில மாதங்களாக கோலிவுட் திரை உலகில் வெற்றி படங்கள் இல்லாமல் இருந்தது என்பதும் முன்னணி நடிகர்களின் படங்களே எதிர்பார்த்த வெற்றி பெறாமல் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் கோலிவுட் திரை உலகம் வெற்றிப்பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் அடுத்ததாக சூரி நடித்த கருடன் திரைப்படமும் நல்ல வெற்றி பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து இன்று வெளியாகி உள்ள விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படமும் வசூல் அளவில் நல்ல வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கும் இந்த படத்திற்கு முன்பதிவுகள் ஆகியுள்ளதை அடுத்து இந்த படம் குறிப்பிடத்தக்க வசூலை பெறும் என்று கூறப்படுகிறது. 
 
எனவே அரண்மனை 4, கருடன், மகாராஜா என அடுத்தடுத்து மூன்று படங்கள் வெற்றி பெற்றுள்ளதால் மீண்டும் கோலிவுட் திரை உலகம் வெற்றி பாதைக்கு செல்வதாக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்