ஹாலிவுட் படத்தில் நடிகை வரலட்சுமி.. சவுதி அரேபியாவில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை..!

Mahendran

புதன், 25 ஜூன் 2025 (17:20 IST)
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை வரலட்சுமி சரத்குமார், தற்போது ஹாலிவுட்டில் கால் பதித்துள்ளார். 'ரிஜானா - ஏ கேஜ்ட் பேர்ட்' (Rijana - A Caged Bird) என்ற ஹாலிவுட் படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் முழு வீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 
2012-ல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'போடா போடி' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான வரலட்சுமி, 'விக்ரம் வேதா', 'சண்டக்கோழி 2', 'சர்கார்', 'ராயன்' உள்ளிட்ட பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு பட உலகிலும் பிஸியாக இருக்கும் வரலட்சுமி, கடந்த ஜூலை மாதம் நிகோலய் சச்தேவ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
 
இந்த நிலையில் சந்திரன் ருத்னம் இயக்கும் 'ரிஜானா - ஏ கேஜ்ட் பேர்ட்' திரைப்படம், 2005-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் ஒரு குழந்தையைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிஜானா நபீக் என்ற பெண் குறித்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.
 
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து வரலட்சுமி கூறுகையில், "ஆஸ்கர் விருது வென்ற நடிகர் ஜெர்மி ஐரோன்ஸ் உடன் நடித்தது எனக்கு ஒரு அற்புதமான உணர்வு. 'தி லயன் கிங்' படத்தில் அவரது குரல் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தமானது. ஹாலிவுட்டில் அவருடன் இணைந்து நடிப்பது எனது நீண்ட நாள் கனவை நிஜமாக்கியுள்ளது. ஜெர்மி ஐரோன்ஸ் ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலக சினிமா வரலாற்றிலும் மிகவும் மதிக்கப்படும் ஒரு நடிகர்," என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்