கோமாவில் இருந்த நபர் திடீரென எழுந்து நடந்ததால் டாக்டர்கள் அதிர்ச்சி..!

Mahendran
சனி, 8 மார்ச் 2025 (10:58 IST)
கோமாவில் இருந்த நபர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென எழுந்து "தனக்கு ஒன்றும் இல்லை" என கூறி நடந்து சென்றார். இதைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஒரு வாலிபர் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது முதுகுத்தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால், உடல்நிலை மோசமானது. ஒரு கட்டத்தில், அவர் கோமா நிலையில் சென்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
 
இந்த நிலையில், வாலிபர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதால், சிகிச்சைக்காக அதிக பணம் தேவைப்படும் என்றும் உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, வாலிபரின் உறவினர்கள் கடன் வாங்கி பணத்தை தயார் செய்து கொண்டிருந்தபோதுதான், யாரும் எதிர்பாராத வகையில், கோமாவில் இருந்ததாக கூறப்பட்ட வாலிபர் திடீரென எழுந்து மிக இயல்பாக நடந்து வந்தார்.
 
"உயிருக்கு போராடி வருகிறார்" என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், அவர் சாதாரணமாக வெளியே நடந்து வந்ததை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர்கள் அவரைப் பிடித்து வைத்திருக்க முயன்றதாகவும், அவர்களது பிடியிலிருந்து தப்பி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், பணத்தை தனது குடும்பத்திலிருந்து பிடுங்கவே மருத்துவமனை நிர்வாகம் தான் கோமாவில் இருந்ததாக கூறி நாடகம் ஆடியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்