தூத்துக்குடி உள்பட சில தென் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஒருபுறம், வட மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கன மழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.