மதம் மாறிவிடுவாரோ என்ற பயம்; மனைவி, குழந்தைகளை கொன்று கணவன் தற்கொலை!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (09:22 IST)
கர்நாடகாவில் தனது மனைவி மதம் மாறிவிடுவாரோ என பயந்து அனைவரையும் கொன்று கணவரும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரில் கார் டிரைவராக பணியாற்றி வருபவர் நாகேஷ். இவருக்கு விஜயலெட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் விஜயலெட்சுமியை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கணவன் – மனைவி இடையே தொடர்ந்து வாக்குவாதம் நிகழ்ந்து வந்துள்ளது. இந்நிலையில் நாகேஷின் வீடு நெடுநேரமாக திறக்கப்படாமல் இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து சென்று பார்த்தபோது அங்கு நாகேஷ் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அருகே விஜயலெட்சுமியும், இரண்டு குழந்தைகளும் இறந்து கிடந்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த போலீஸார் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டை சோதனை செய்ததில் நாகேஷ் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் தன் மனைவி மதம் மாறி விடுவார் என்ற பயத்தில் அவர்களை கொன்றுவிட்டதாக எழுதியுள்ளார். இதுதொடர்பாக மதம் மாற்ற முயற்சித்த பெண்ணையும் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்