மும்பை விளம்பர பலகை விபத்து.. ஒரு ஆண்டுக்கு முன்பே பிரதமர் மோடிக்கு புகார் மனு..!

Mahendran
செவ்வாய், 14 மே 2024 (16:53 IST)
மும்பையில் நேற்று திடீரென புழுதி புயல் வீசியதால் பெரும் சேதம் ஏற்பட்டது என்பதும் குறிப்பாக ஒரு மிகப்பெரிய விளம்பர பலகை விழுந்ததில் 14 பேர் உயிரிழந்ததாகவும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின. 
 
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஏற்கனவே அந்த விளம்பர பலகையை அகற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு பிரதமர் மோடிக்கு அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு சங்கத்தினர் புகார் மனு அனுப்பியதாகவும் ஆனால் அந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 
 
ஒரு ஆண்டுக்கு முன்பே நாங்கள் கொடுத்த புகாருக்கு தகுந்த நடவடிக்கை எடுத்து விளம்பர பலகையை அகற்றி இருந்தால் இன்று இந்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது என்று அந்த பகுதியில் குடியிருப்பாளர்கள் தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
விபத்துக்குள்ளான விளம்பர பலகை அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்ததாகவும் திடீரென வீசிய பலத்த காற்றால் நூறு அடி உயரம் உள்ள விளம்பர பலகை பெட்ரோல் நிலையத்தின் மீது விழுந்ததாகவும் மழை காரணமாக பெட்ரோல் நிலையத்தில் ஒதுங்கி இருந்த சுமார் 150 வாகனங்கள் மற்றும் ஒதுங்கி இருந்தவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த விளம்பர பலகையின் மொத்த எடை 250 டன் என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்