தோனி முதல் ரிஷப் பண்ட் வரை யாரும் படைக்காத சாதனையை படைத்த சஞ்சு சாம்சன்!

vinoth
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (10:34 IST)
நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரானப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் வான வேடிக்கைக் காட்டி 297 ரன்கள் சேர்த்தனர். இந்த போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரியான் பராக் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன் பின்னர் ஆடிய பங்களாதேஷ் அணி 164 ரன்கள் மட்டுமே சேர்த்து 133 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 111 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் தன்னுடைய இன்னிங்ஸில் 11 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் விளாசினார். இது சர்வதேச டி 20 போட்டிகளில் அவர் அடிக்கும் முதல் சதமாகும்.

இதன் மூலம் டி 20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இந்திய அணிக்காக விளையாட தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த அவர் இந்த சதத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார்.           

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்