பேட்ட, விஸ்வாசம் படங்கள்: 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (11:08 IST)
ரஜினியின் பேட்ட,  அஜித்தின் விஸ்வாசம் படங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது.



இந்த இரண்டு படங்களுமே நாளை மறுதினம் தமிழகம் முழுவதும் வெளியாகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதிக அளவு திரையரங்குகளில் படங்கள் வெளியாகிறது. நேற்று முன்தினம் தொடங்கி டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நிறைய திரையரங்குகளில் மூன்று நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் பொங்கல் பண்டிகையின்போது இன்னும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி அதிக காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் ஸ்ரீதர் கூறுகையில், வழக்கமாக திரையரங்குகளில் நான்கு காட்சிகளை திரையிட அனுமதிக்கப்படும். பொங்கல் பண்டிகையையொட்டி பத்தாம் தேதி முதல் 20ம் தேதி வரை தினமும் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கியுள்ளது. டிக்கெட் முன்பதிவு பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களுக்குமே சிறப்பாக இருக்கிறது. எனவே தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கு இரண்டு படங்களுமே நல்ல லாபம் ஈட்டித்தரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்