பராசக்தி படத்தில் நான் ஏன் நடிக்கவில்லை… முதல் முறையாக மனம் திறந்த லோகேஷ்!

vinoth

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (14:01 IST)
தமிழ் சினிமாவில் ஒரு  வணிக இயக்குனராக லோகேஷ் கனகராஜ் அடைந்திருக்கும் உயரம் அளப்பரியது. தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்க அந்த படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

லோகேஷ் தன்னுடைய ஒரு படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களை மற்ற படங்களிலும் இடம்பெறச் செய்து கிராஸ் ஓவர் முயற்சிகளை மேற்கொண்டார். இது ஹாலிவுட் மற்றும் இந்திய படங்களில் முன்பே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்தான் என்றாலும் ‘லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ என்பது இப்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக மாறியுள்ளது.

இதற்கிடையில் லோகேஷ், அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு முன்பாக சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பராசக்தி படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பின்னர் அந்த வேடத்தில் ரவி மோகன் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் பராசக்தி படத்தில் தான் ஏன் நடிக்கவில்லை என்று லோகேஷ் பேசியுள்ளார். அதில் “பராசக்தி படத்தில் எனக்கு  வில்லன் வேடத்தில் நடிக்க அழைப்பு வந்தது. எனக்கு அந்த கதாபாத்திரம் பிடித்திருந்தது. சிவகார்த்திகேயனும் என்னை அந்த படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் என்னுடைய பணிகளுக்கு இடையே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனது. ஏனென்றால் கூலி படத்தின் பணிகள் பாதிக்கும் என்று அந்த வாய்ப்பை நிராகரித்தேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்