அழுக்கேறிய மூளையை சுத்தப்படுத்த முடியாது! காலாவது சுத்தமாகட்டும்! - தன் போட்டோவை மிதித்தவர்களுக்கு உதயநிதி பதில்!

Prasanth Karthick
புதன், 9 அக்டோபர் 2024 (14:47 IST)

சனாதன தர்மம் குறித்து உதயநிதி - பவன் கல்யாண் இடையே ஏற்பட்ட உரசலை தொடர்ந்து ஆந்திராவில் கோவில் ஒன்றில் உதயநிதி படத்தை கால்மிதியாக பயன்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதாக வெளியான சர்ச்சை விவகாரத்தில் சமீபத்தில் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் “சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்” என பேசியிருந்தார். அவர் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டுதான் பேசுவதாக பேசிக் கொள்ளப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் “Wait and see” என சிம்பிளாக முடித்துக் கொண்டார்.

 

இந்நிலையில் ஆந்திராவில் கோவில் ஒன்றில் கால்மிதியாக உதயநிதி ஸ்டாலினின் படம் பயன்படுத்தப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை உதயநிதி ஸ்டாலினே தனது எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்து பதிவிட்டுள்ளார்.

 

அந்த பதிவில் “என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது!

 

கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.

 

தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களையும் - பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.

 

அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் - மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.

 

என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்.

 

கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத்தலைவர் அவர்கள் வழியில் பகுத்தறிவு - சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்!” என்று தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்