நகைக்கடன் குறித்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் தற்போது தற்போது நிதி அமைச்சரின் தலையீட்டின் பேரில் நிதித்துறை செயலாளர் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். எனவே தற்காலிகமாக புதிய விதிமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக நன்றி தெரிவித்து மதுரை எம்பி சு வெங்கடேசனின் எக்ஸ் பதிவு இதோ:
மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நேரில் சந்தித்து ரிசர்வ் வங்கியின் புதிய நகைக் கடன் நகல் விதிமுறைகள் கோடானுகோடி எளிய, நடுத்தர மக்களின் வாழ்வில் பேரிடியாக அமைந்திருப்பதை விரிவான கடிதம் அளித்து தலையீட்டைக் கோரி இருந்தேன்.
தற்போது நிதி அமைச்சரின் தலையீட்டின் பேரில் நிதித்துறை செயலாளர் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
உடனடியாக அமலுக்கு வருமென்று அறிவிக்கப்பட்ட புதிய நகைக் கடன் விதிமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
அவசரப்படாமல் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு கொண்டு வருமாறும் கூறப்பட்டு இருப்பது முதல் வெற்றி.
எளிய நகைக் கடன்தாரர்கள் பாதிப்புக்கு ஆளாகாமல் கவனம் கொள்ளவும், ரூ 2 லட்சம் கடனுக்கு கீழான விண்ணப்பதாரர்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள நிபந்தனைகளில் இருந்து விதி விலக்கு அளிக்குமாறும், அவர்களுக்கு கடன்கள் தாமதமின்றி விரைவில் வழங்கப்பட ஆவன செய்யுமாறும், பொது வெளியில் எழுந்துள்ள கவலைகளை கணக்கில் கொண்டும் விதி முறைகளை வகுக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது மக்களின் குரலுக்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி. எனது கவனத்திற்கு இப் பிரச்சினையை கொண்டு வந்த பொது மக்களின் உணர்வுகளை ஒன்றிய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன்.
நேரில் சந்தித்த போது உறுதி அளித்தபடி உடனடி தலையீட்டை செய்துள்ள மாண்புமிகு நிதியமைச்சருக்கு நன்றி.
விதிமுறைகளை இறுதி செய்யும் போது எளிய நடுத்தர மக்களை, சிறு தொழிலகங்கள் - வணிகர்களை - விவசாயிகளை பாதிக்கக் கூடிய எல்லா நிபந்தனைகளையும் மேற்கூறிய அறிவுறுத்தலைகளை கணக்கில் கொண்டு ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுமென்று நம்புகிறேன்.
கூடுதல் கடன்கள் கிடைப்பதில் தற்போது உள்ள சிரமங்களும் களையப்பட வேண்டுமென்று நிதியமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.