இந்தியாவில் 83 லட்சம் இறந்தவர்களின் பெயர்கள் ஆதார் தகவல் தொகுப்பில் இருந்து நீக்கப்படவில்லை என்றும், வெறும் 1.15 கோடி பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் உதவித்தொகை பெறுவதற்கோ, இருப்பிட சான்றிதழ் பெறுவதற்கோ, அடையாள அட்டைக்கோ உதவும் வகையில் ஆதார் அட்டை இருந்து வரும் நிலையில், ஆதார் அட்டை தேவைக்காக தினமும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரத்தின்படி, இந்தியாவில் தற்போது 142.39 கோடி ஆதார் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 146.39 கோடி உள்ளது.
இந்த நிலையில் பிறப்பு இறப்பு விவரங்களை பதிவு செய்யும் அமைப்பு 2007 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை 83.5 லட்சம் பேர் இறந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், காலமானவர்களின் பெயர்களை ஆதார் தகவல் தொகுப்பில் இருந்து நீக்குதல் என்ற பணி சரியாக நடைபெறவில்லை என்றும், வெறும் 10 சதவீத பெயர்கள் மட்டுமே நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தகவல் தந்தால் மட்டுமே ஆதார் தகவல் தொகுப்பில் இருந்து பெயர்கள் நீக்கப்படுவதாகவும், இந்த நடைமுறை கடினமாக இருப்பதால் பலரும் தகவல் தருவதில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, உயிரிழந்த பின்னரும் அவர்களுடைய ஆதார் அட்டை செயலாக்கத்தில் உள்ளதாக காட்டுவதாகவும், இதனால் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.