நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? காவல்துறை விளக்கம்..!

Siva

வியாழன், 10 ஏப்ரல் 2025 (16:10 IST)
நாமக்கல் காங்கிரஸ் எம்பி மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
 
அந்த விளக்கத்தில் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வெளியாகும் செய்தி பொய்யானது என்றும் அதிகாலையில் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்துள்ளது என்றும் தீயணைப்பு துறையினர் உடனே தீயை அணைத்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டணம் கிராமத்தில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.மாதேஸ்வரன் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் அவரது தாயார் வசித்து வருகின்றார். இன்று (10.04.2025) அதிகாலை 01.30 மணியளவில் வீட்டில் உள்ள ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. 
 
இதனையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் சென்று தீயை அணைத்தனர். இவ்விபத்தில் வீட்டிலிருந்த மின்விசிறி, சுவிட்ச் பாக்ஸ் மற்றும் ஏசி ஆகியவை சேதமடைந்துள்ளது. இவ்விபத்தில் எந்தவொரு நபருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. 
 
இவ்விபத்து தொடர்பாக புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியில் இன்று மதியம் சுமார் 13.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக செய்தி ஒளிபரப்பப்பட்டது. மேற்கண்ட செய்தியானது பொய்யான புரளியாகும் என நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 
 
மேலும் இதுபோல் வதந்தி மற்றும் பொய்யான செய்திகளை வெளியிடுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்