திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

Mahendran

வெள்ளி, 17 அக்டோபர் 2025 (18:24 IST)
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சொந்த ஊர் செல்ல தட்கல் முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்ற பயணிகள், ஐஆர்சிடிசி இணையதளம் திடீரென முடங்கியதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
 
இன்று காலை சுமார் 10.45 மணியளவில் இணையதளம் முடங்கியது. இதனால், ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் பயணிகள், குறிப்பாக தட்கல் முன்பதிவுக்கு முயன்றவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் டிக்கெட் பதிவு செய்ய முயன்றதே தொழில்நுட்ப கோளாறுக்கு காரணம் என ஐஆர்சிடிசி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
விரைவான நடவடிக்கைக்கு பிறகு, நண்பகல் 12.15 மணியளவில் இணையதளம் மீண்டும் சரிசெய்யப்பட்டது. இருப்பினும், பல ரயில்களுக்கான டிக்கெட்டுகள் அதற்குள் விற்று தீர்ந்து விட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
 
பண்டிகைக் காலங்களில் இதுபோன்று இணையதளம் முடங்குவது வழக்கமாகிவிட்டது. இதுபோன்ற நேரங்களில், பயணிகள் ரயில்வே கவுண்டர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய முயலலாம் என ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்