நீ போகாத என்ன விட்டு..! தண்ணீர் பஞ்சத்தால் விட்டுச்சென்ற மனைவி! - கலெக்டரிடம் முறையிட்ட கணவன்!

Prasanth Karthick

வியாழன், 10 ஏப்ரல் 2025 (15:31 IST)

’நீரின்றி அமையாது உலகு’ என்று வள்ளுவர் பாடினார். ஆனால் தற்போதைய நிலையில் ‘நீரின்றி அமையாது உறவு’ என்ற வகையில் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது.

 

மத்திய பிரதேசம் - சத்தீஸ்கர் எல்லையில் அமைந்துள்ள மாவட்டம் திண்டோரி. இங்குள்ள தேவ்ரா என்ற கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களின் குடிநீர் தேவைக்கு மொத்தமே அந்த கிராமத்தில் ஒரேயொரு குடிநீர் குழாய்தான் உள்ளது. இதனால் தண்ணீர் பிடிக்க காலை முதல் இரவு வரை அங்கு கூட்டம் இருந்துக் கொண்டே இருக்கிறது.

 

அந்த கிராமத்தை சேர்ந்த ஜிதேந்திரா சோனி என்பவர் தனது மனைவி லட்சுமி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இந்த தண்ணீர் பிரச்சினையால் விரக்தியடைந்த லட்சுமி, ஜிதேந்திராவை விட்டுவிட்டு குழந்தைகளோடு தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ஜிதேந்திரா எவ்வளவு கெஞ்சியும் அவர் வரவில்லை.

 

இதனால் கலெக்டர் அலுவலகம் சென்ற ஜிதேந்திரா தனது நிலையை எடுத்துக் கூறி தன் கிராமத்து தண்ணீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் கிராமத்துப் பெண்கள் எல்லாரும் வெளியேறிவிடுவார்கள் என்று கூறி, தண்ணீர் பிரச்சினையை சரிசெய்யுமாறும், தனது குடும்பத்துடன் தன்னை சேர்த்து வைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

அதன்படி கலெக்டர் உத்தரவின் பேரில் கிராமத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் அங்குள்ள ஒரே ஆள்துழை கிணறும் கோடை காரணமாக நீர்மட்டம் குறைந்துள்ளதை அறிந்தனர். அதனால் அருகில் உள்ள கிராமத்தின் நீர்த்தேக்க தொட்டியிலிருந்து இந்த கிராமத்திற்கு கூடுதல் குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறதாம்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்