“அமைச்சர் பதவி காலி” - கவனத்தை ஈர்க்கும் மனோ தங்கராஜ் போட்ட பதிவு..!!

Senthil Velan
ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (12:42 IST)
மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்று மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
 
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படும் மனோ தங்கராஜ் தமது சமூக வலைதளப் பக்கத்தில் போட்டுள்ள பதிவில்,  2021 - தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5% என்றிருந்தது ஒரே ஆண்டில் 2022-ல் 16.4% மாகவும், 2023-ல் 25% மாகவும் உயர்ந்தது.

2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது 2024-ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன் என்றும் இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ALSO READ: "விமர்சிப்பவர்களுக்கு எனது பணியின் மூலம் பதிலளிப்பேன்" - உதயநிதி ஸ்டாலின்.!!
 
மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்