நான் ஜெ.வின் மகன் - வாலிபரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (14:24 IST)
தன்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகன் என கூறி, போலி ஆவணங்கள் வெளியிட்ட கிருஷ்ணமூர்த்தி என்ற வாலிபரை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
கிருஷ்ணமூர்த்தி என்ற வாலிபர், தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறந்த மகன் எனவும், தனது தாயான ஜெ.வை, அவரின் தோழி சசிகலா அடித்துக் கொலை செய்து விட்டதாகவும் சமீபத்தில் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
ஈரோட்டை சேர்ந்த அவர், சில நாட்களுக்கு முன்பு, தமிழக அரசின் முதன்மை செயலாளர், டி.ஜி.பி, உள்துறை செயலாளர் ஆகிய மூவருக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: 
 
என் பெயர் கிருஷ்ணமூர்த்தி. வயது 31. நான் ஈரோடு மாவட்டத்தில் முத்துக்கவுண்டம் பாளையம், காஞ்சி கோவில் கிராமத்தில் வசிக்கிறேன். நான் நடிகர் சோமன்பாபுவிற்கும், ஜெயலலிதாவிற்கும் பிறந்த ஆண் குழந்தை. அவர்கள் இருவருக்கும் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, நான் சிறு வயதாக இருக்கும் போதே, என்னை ஈரோட்டை சேர்ந்த ஒரு தம்பதிக்கு தத்துக் கொடுத்து விட்டனர். அதற்கான ஆதாரங்களையும் இதில் இணைத்துள்ளேன்.  
 
தற்போது நான் ஈரோட்டில் ஜெ.வின் தோழி வசந்தாமணி என்பவரின் வீட்டில் வசித்து வருகிறேன். கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நான் ஜெ.வின் போயஸ்கார்டன் வீட்டில் இருந்தேன்.  செப்.22ம் தேதி, எனது தாய் ஜெ.விற்கும் சசிகலாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஜெ.வை மாடிப்படிக்கட்டில் இருந்து சசிகலா கீழே தள்ளி கொலை செய்தார். இதில் பயந்து போன நான் இவ்வளவு நாட்களாக வெளியே வரவில்லை.  
 
தற்போது எனது வளர்ப்பு பெற்றோருக்கு கொலை மிரட்டல் வருகிறது. அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். சசிகலாவிற்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும்” என கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டிருந்தார்.
 
இந்நிலையில், இவர் சமர்பித்த ஆவணங்கள் போலி என்பது நீதிமன்றத்திற்கு தெரிய வந்தது. எனவே, இவரை கைது செய்ய வேண்டும் எனவும், அதுபற்றிய அறிக்கையை வருகிற ஏப்ரல் 10ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
சில நாட்களுக்கு முன்பு, நான் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்கு பிறந்த மகள் என பிரியா மகாலட்சுமி என்ற பெண் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தார். போலீசாரின் விசாரணையில் அவர் மோசடி பேர்வழி எனத் தெரிந்ததும், போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது, கிருஷ்ணமூர்த்தியும் கைதாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்