தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பேமண்ட் செய்யும்போது அது தோல்வியடைந்தால் அரை மணி நேரத்தில் பணத்தை திரும்ப பெற போக்குவரத்துக் கழகம் வசதி செய்துள்ளது.
நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப போக்குவரத்துக் கழகத்தில் செயல்பாடுகள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறாக சமீபத்தில் சென்னை மாநகராட்சி பேருந்துகளில் ட்ராக்கருடன் கூடிய டிக்கெட் மெஷின் வழங்கப்பட்டது. இணைய வசதி கொண்ட இந்த எந்திரத்தில் யுபிஐ வசதியை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட் எடுத்துக் கொள்ள முடியும். இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதுடன், நடத்துனர்களுக்கும் சில்லறை பற்றாக்குறை பிரச்சினைகளை குறைத்துள்ளது.
ஆனால் அதேசமயம் யுபிஐ டிக்கெட்டுகள் பெற ஸ்கேன் செய்து பணம் செலுத்தும்போது சிக்னல் கோளாறால் பணமும் எடுக்கப்பட்டு, ஆனால் பரிவர்த்தனையும் தோல்வி அடைந்து விடுவது பயணிகளுக்கு சிரமத்தை அளித்து வந்தது. இவ்வாறாக தவறாக எடுக்கப்பட்டு விடும் பணம் நீண்ட நேரம் கழித்து மீண்டும் பயணிகள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாவதை குறைப்பதற்காக போக்குவரத்துக் கழகம், எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து விரைவு பரிவர்த்தனைக்கான முயற்சியை எடுத்துள்ளது.
அதன்படி, பயணிகள் டிக்கெட்டுக்காக பணம் செலுத்தும்போது சிக்னல் கோளாறால் பணம் பிடித்தம் செய்யப்பட்டால் அரை மணி நேரத்தில் அந்த தொகையை பயணிகள் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K