இன்று மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் மனுக்கள் பரிசீலனை நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் 6 எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய எம்.பிக்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக 2 வேட்பாளர்களை பங்களிக்க முடியும். தேர்தலுக்கான வேட்புமனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில் இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற உள்ளது.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என திண்டுக்கல் சூர்யமூர்த்தி என்பவர் தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்ரமணியனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில், இந்த வேட்புமனுக்களை ஏற்க கூடாது என அவர் கோரிக்கை விடுத்த நிலையில், தேர்தல் அதிகாரி அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மர்ம வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக வெடிக்குண்டு நிபுணர்கள் வீட்டை சோதனையிட்ட நிலையில் அது புரளி என தெரிய வந்தது. இந்த மிரட்டலை விடுத்தது யார் என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Edit by Prasanth.K