என் விலையை நிர்ணயிக்க தைரியம் உள்ளதா? : வைரலாகும் இளம்பெண்ணின் கருத்து

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (17:54 IST)
கேரளாவின் ஒரு விழாவில் பேசிய அம்மாநில கலால் வரித்துறை ஆணையர் ரிஷிராஜ் சிங் “ஒரு பெண்ணை, ஒரு ஆண் 14 நிமிடங்கள் உற்றுப் பார்த்தாலே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்” என்று பேசியிருந்தார்.


 


அவரின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பல ஆண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முக்கியமாக கேரளாவில் இது அதிகமாக இருந்தது. பலர் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்தனர்.
 
அப்படியெனில் 13 நிமிடம் பார்த்து விட்டு, இடைவெளி விட்டுவிட்டு, மீண்டும் 13 நிமிடங்கள் பார்க்கலாமா என்று பலரும் கேள்வி எழுப்பினர். 
 
இதனிடையே கேரள ஆலப்புழாவைச் சேர்ந்த வனஜா வாசுதேவ் என்ற இளம் பெண் எழுத்தாளர் தனது முகநூல் பக்கத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது:
 
ஒரு ஆணை பெண்ணோ அல்லது பெண்ணை ஆணோ உற்றுப்பார்ப்பது இயல்பான ஒன்றுதான்.. நான் கூட அழகான ஆண்களை பார்த்து ரசித்திருக்கிறேன். இதில் துன்புறுத்தல் ஒன்றும் இல்லை. உண்மையில் அப்படி பார்ப்பது பெண்களுக்கு தங்கள் மீது தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
 
உடனே தங்களை கலாச்சார தூதுவர்களாக காட்டிக் கொண்டு பல இளைஞர்கள் பொங்கி எழுந்து, அவரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். 1000 பேருக்கும் மேலானோர் முகநூலில் கமெண்ட் தெரிவித்தனர். பலர் அவரின் பேஸ்புக் இன்பாக்சில் போய் அவரை அசிங்கமாக திட்டி கமெண்ட் போட்டனர். சிலர் உன்னுடைய விலை என்ன? என்று கேட்டனர்.
ஆனால், அவர்களின் கருத்துகளுக்கு ஆத்திரப்படாமல், வனஜா தனது அடுத்த பதிவினை இட்டார். அதில் அவர் கூறியதாவது: 
 
எனக்கு 5 வயது இருக்கும் போது என் தந்தை மறைந்து போனார். என்னையும், என் சகோதரனையும் என் தாய் வறுமையில் போராடி காப்பாற்றினார். பகலில் என் தாய் என்னிடம் கடுமையாக நடந்து கொள்வார். ஆனால், இரவில் இரவில் என் தலை கோதி கண்ணீர் விடுவார்.
 
கணவனை இழந்த அவரின் தனியை காரணமாகவே, அவர் அப்படி நடந்து கொண்டார் என்பது தற்போது புரிகிறது. அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் என அனைவரும் என் தாயை கொச்சையாக விமர்சித்தனர். பல கட்டுக்கதைகளை பேசினர்.
 
அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்துதான் நான் எனது படிப்பை முடித்தேன். பல நிறுவனங்களில் பணி புரிந்தேன்.  நான் கலாச்சாரத்தை சீரழித்துவிட்டதாய் கூறுபவர்கள் ஏன் எனக்கு அதுபற்றி பாடம் எடுக்கக்கூடாது?
 
நான் ஆண்களை ரசித்து பார்க்கிறேன் என்று கூறுவதால், அவர்களின் விருப்பத்திற்கு ஒத்துழைத்து விடுவேன் என்று அர்த்தமல்ல. வறுமையோடு போராடி குடும்பத்தை காப்பாற்றிய ஒரு விதவைத்தாயின் மகளான எனக்கு உங்கள் கருத்துகள் காயத்தை ஏற்படுத்தாது. இந்த பதிவை பார்த்து எனக்கு ஒரு விலை நிர்ணயம் செய்ய உங்களுக்கு தைரியம் உள்ளதா? அப்படியெனில் வெளிப்படையாக வந்து கமெண்ட் போடுங்கள். இன்பாக்சுக்குள் வந்து சொல்லாதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். 
 
இந்த கருத்து, அவரை மோசமாக சித்தரித்த பலரின் மனநிலையை மாற்றியது. அதன் எதிரொலியாக பலரும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். ஆனாலும் தொடர்ந்து சிலர் அவரை வசைபாடுவதை நிறுத்தவில்லை.
 
வனஜாவின் இந்த பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகிறது. கேரள நடிகர்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் அதை பகிர்ந்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்