ரூபாய் நோட்டு தடையை கண்டித்து நாடு முழுவதும் 28-ஆம் தேதி போராட்டம்!

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2016 (08:33 IST)
நாடு முழுவதும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி இரவு அறிவித்தார். இதற்கு பதிலாக புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை பெறலாம் என கூறப்பட்டது. கருப்பு பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிக்கவே இந்த நடவடிக்கை என கூறியது மத்திய அரசு.


 
 
கருப்பு பணத்தை ஒழிக்க அரசு எடுத்த இந்த நடவடிக்கையை அனைவரும் பாராட்டினாலும் அதற்கேற்ற முன்னேற்பாடுகளை செய்து மக்கள் படும் சிரமத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய தவறிய அரசை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
 
குறிப்பாக அனைத்து எதிர்கட்சிகளும் இதனை கடுமையாக எதிர்க்கின்றன. அரசின் நோக்கம் உன்னதமாக இருந்தாலும் நடவடிக்கை சரியாக இல்லை. இதனால் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள் தான் என குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
 
தங்கள் பணத்தை மக்கள் எடுக்க விதிக்கப்பட்டிருக்கும் ஏராமளமான கட்டுப்பாடுகள். புதிய நோட்டுகளின் கடுமையான தட்டுப்பாடு. முடங்கி கிடக்கும் ஏடிஎம்கள். மருத்துவம், திருமணம் என அவசர கால தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் மக்களின் சிரமத்தை சொல்லி மாளாது.
 
இவற்றையெல்லாம் குற்றச்சாட்டாக வைத்து நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர் மக்கள். பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதிலளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வந்தபாடில்லை.
 
இதனால் தற்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டத்தை அறிவித்துள்ளது. தங்கள் சொந்த பணத்தை செலவழிக்கும் வாய்ப்பு மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டு தடையால் அரசு தோல்வியடைந்துள்ளது என குற்றச்சாட்டை வைத்து வரும் 28-ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் வங்கிகள் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்