'காசாவை அமெரிக்கா கைப்பற்றும்: இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் டிரம்ப் பேட்டி..!

Siva
புதன், 5 பிப்ரவரி 2025 (08:14 IST)
நேற்று  இஸ்ரேல் பிரதமரை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும்" என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், "உலகில் நான் அதிபராக இருக்கும் வரை எந்த போரும் நடக்க விடமாட்டேன்" என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், டிரம்ப் அழைப்பின் பேரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா சென்று அவரை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர், வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது, போர் நிறுத்தம் மற்றும் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், தேவைப்பட்டால் அமெரிக்கா, காசா பகுதியை கைப்பற்றும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். "காசா பகுதியில் அமெரிக்க ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவோம். மத்திய கிழக்கு பகுதியில் அமைதி சூழலை உருவாக்க, காசா பகுதியை கைப்பற்றி அங்கு இருக்கும் வெடிகுண்டு ஆயுதங்களை அகற்றுவோம்" என்றும் கூறியுள்ளார்.

மேலும், அந்த பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்பின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர், "அவருடைய யோசனை வரலாற்றை மாற்றக்கூடிய ஒன்று. இது ஒரு நல்ல எதிர்காலத்துக்கான தொடக்கம்" என்றும் கூறியுள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்