எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து, மீனவ சங்கங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி கைதான மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட 34 மீனவர்களில் 19 பேரை மட்டும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. மேலும், படகு உரிமையாளர்கள், 2 படகு ஓட்டுனர்கள் என 3 பேருக்கு இலங்கை பண மதிப்பில் ரூ.60.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மீதமுள்ள 16 பேருக்கு தலா 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், விடுதலை செய்யப்படாத மீதமுள்ள மீனவர்களின் படகு விவரங்களில் முரண்பாடு இருப்பதால், இந்த வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, 19 மீனவர்கள் அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள மீனவர் சங்கங்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.