தண்டவாளத்தில் விரிசல்; ஓடி சென்று ரயிலை நிறுத்திய பெண்! – பண்ருட்டி பெண்ணின் அசாத்திய செயல்!

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (10:52 IST)
பண்ருட்டி அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டு இளம்பெண் ஒருவர் ஓடி சென்று ரயிலை நிறுத்தி அசம்பாவிதத்தை தடுத்துள்ளார்.

கடலூர் – விழுப்புரம் ரயில் தடம் வழியாக நாள்தோறும் பல பாசஞ்சர் மற்றும் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் கிராமத்தை சேர்ந்த மஞ்சு என்ற பெண் அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது தண்டவாளம் உடைந்து விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டுள்ளார்.

உடனே சாமர்த்தியமாக சிந்தித்த அவர் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சேந்தனூர் ரயில் நிலையத்திற்கு ஓடி சென்று தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை சொல்லியுள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் திருச்செந்தூர் – சென்னை எக்ஸ்பிரஸ் அவ்வழியாக வருவதை அறிந்து உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளனர்.

பின்னர் விரிசல் விழுந்திருந்த பகுதி சரிசெய்யப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டது. தண்டவாள விரிசலை ஓடி வந்து தெரிவித்து பெரும் அசம்பாவிதத்தை ஏற்படாமல் தடுத்த பெண் மஞ்சுவை ரயில்வே அதிகாரிகள் பாராட்டி சால்வை அணிவித்தனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்