தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்களுக்கு கடிதம் எழுதுகிறார். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால், தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், இன்று மீண்டும் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் பகுதி மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அராஜகம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும், இந்த தொடர் கைதுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.