அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

J.Durai
திங்கள், 28 அக்டோபர் 2024 (09:47 IST)
மருது  சகோதரர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ராமநாதபுரம் பகுதியில் தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கம் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி கலந்துகொண்டு மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். 
 
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழேந்தி..... 
 
மருது சகோதரர்கள் வேலு நாச்சியார் வாழ்க்கையின் வீர வாழ்க்கை,  புகழ் குறித்து பேசினார். தொடர்ந்து கோவை மாவட்டத்தில் ஒரே இடத்தில் சுபாஷ் சந்திர போஸ், பசும்பொன் தேவர், வேலுநாச்சியார் மூவருக்கும் சிலை நிறுவப்பட வேண்டும் எனவும் அந்த சிலையை தானே தருவதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி மருது சகோதரர்களுக்கும் தனி இடத்தில் தனி சிலை அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறினார். 
 
தொடர்ந்து அரசியல் குறித்து பேசிய அவர் அதிமுகவை ஒருங்கிணைப்பது கஷ்டமாக உள்ளதாக தெரிவித்தார். நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கி உள்ளதை பாராட்டிய அவர் எக்காலத்திலும் பின்வாங்கி விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும் நடிகர் விஜய் மாறுதலுக்காக வருகிறார் அந்த மாறுதல் உங்களால் வரட்டும் என கூறிய புகழேந்தி விஜயகாந்த் இருந்திருந்தால் அந்த மாறுதல் வேறு மாதிரி இருந்திருக்கும் நடிகர் ரஜினி இன்னும் அரசியலுக்கு வரவில்லை கமல் வேறு விதமாக அரசியல் செய்வதாக சாடினார். 
 
மேலும் நடிகர் விஜயினால் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் பாதிப்பு வரும் எனவும் அதிமுக ஓட்டு விஜய்க்கு சென்று விடும் எனவும் புதிய வரவுகளால் அதிமுகவிற்கு தான் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றார். மேலும் சசிகலா ஓபிஎஸ் என அனைவரும் களத்தில் இறங்கி ஒன்றாக செயல்பட வேண்டும் எனவும் அதிமுக தொண்டர்களும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார். 
 
பொதுமக்கள் அனைவரும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் எம்ஜிஆர் ஆட்சி வேண்டும் என்று தான் கூறுவதாகவும் தெரிவித்தார். அதிமுகவை தற்பொழுது உள்ள தலைவர்கள் நடத்தவில்லை என கூறிய அவர் பாஜக தான் நடத்துவதாகவும்  தற்போது ரெய்டு செல்லும் பொழுது எடப்பாடி பழனிச்சாமி ஏன் வாய் திறக்கவில்லை? என கேள்வி எழுப்பினார். மேலும் பாஜகவை பார்த்து இபிஎஸ் ஓபிஎஸ் இருவருக்கும் பயம் எனவும் சாடிய அவர் எஸ்.பி வேலுமணி பாஜக கனவில் இருப்பதாகவும் அதனால் அவர் எதுவும் பேச மாட்டார் எனவும் குறிப்பிட்டார். 
 
நடிகர் விஜய்க்கு வாழ்த்து கூறினாலும் தான் இந்த கட்சியில் இருந்து பிரிந்து வரமாட்டேன் என தெரிவித்த அவர் இன்று நடக்கும் மாநாட்டில் பெரியார் அம்பேத்கர் காமராஜர் ஆகியோருக்கு பெரிய கட்அவுட் வைத்ததற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டு விஜயின் கோட்பாடுகள் பெரியாரின் கோட்பாடுகளாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். 
 
தற்பொழுது உள்ள சூழலில் எடப்பாடி பழனிச்சாமி ஐந்து நிமிடம் இறங்கி வந்தால் அனைத்தும் மாறிவிடும்  ஆனால் எடப்பாடி பழனிச்சாமி திருந்துவதில்லை எனவும் சாடினார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் தண்ணீர் தேங்காது என்று கூறியது எடப்பாடி பழனிச்சாமி தானே ஆனால் தற்பொழுது திமுகவை கை காண்பிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க தேவையில்லை எனவும் கூறினார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்