உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென சிறுத்தை ஒன்று திருமண மண்டபத்திற்கு புகுந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ பகுதியில், அக்சய் மற்றும் ஜோதி குமாரி ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவு திருமணத்திற்கு முந்தைய நாள் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன.
அப்போது, அந்த திருமண மண்டபத்திற்கு திடீரென புகுந்த சிறுத்தை காரணமாக உறவினர்களும், திருமணத்திற்கு வந்திருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். மணமகள், மணமகன் ஆகிய இருவரும் காருக்குள் சென்று காரைப் பூட்டி கொண்டனர்.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து சிறுத்தையை தேட தொடங்கினர். அப்போது, அந்த சிறுத்தை முதல் மாடியில் பதுங்கி இருந்ததை அடுத்து, அதை லாவகமாக பிடித்தனர்.
பிடிக்கும் போது ஏற்பட்ட முயற்சியில், வனத்துறை அதிகாரி ஒருவரும் கேமரா மேன் இருவரும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, வனத்துறையினர் சிறுத்தையை கூண்டில் வைத்து எடுத்துச் சென்ற பின்னர் தான் திருமண நிகழ்வுகள் தொடர்ந்து நடந்ததாக கூறப்படுகிறது.