ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (16:03 IST)
தென் கிழக்கு ஆஸ்திரேலியாவில், புதன்கிழமையன்று ஆஸ்திரேலிய நேரப்படி காலை 9.15 மணிக்கு விக்டோரியா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மெல்பர்ன் நகரத்தில் சில கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
 
இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் மோசமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் நில நடுக்கங்கள் அசாதாரணமானவை. அது மிகவும் வருத்தமான நிகழ்வு எனவும் கூறியுள்ளார்.
 
இந்த நிலநடுக்கத்தை தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ செளத் வேல்ஸ் பகுதிகளிலும் உணரப்பட்டது. 5.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்துக்குப் பிறகு, 4.0 மற்றும் 3.1 ரிடர் அளவில் அடுத்தடுத்த குறைந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களும் பதிவாகியுள்ளன.
 
சமீபத்திய ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது. விக்டோரியா மாகாண அவசர சேவை அமைப்பு நிலநடுக்கத்துக்குப் பிறகான அதிர்வுகளை எதிர்கொள்ள மக்களை எச்சரித்திருக்கிறது. பலவீனமாக கட்டடங்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பது, வாகனங்கள் ஓட்டுவதை தவிர்ப்பது போன்ற விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறது.
 
இந்த நிலநடுக்கத்தால் சில டிராம் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சில வானுயர் கட்டடங்கள் மற்றும் மருத்துவமனைகளிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சில நகரவாசிகள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்