மாநாடு தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போவது இவர்கள்தான்! வெளியான தகவல்!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (10:00 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மாநாடு படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்துள்ளது. இதுபோல சிம்புவின் படம் ஒன்று அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்து ஒரு மாமாங்கம் ஆகிறது. அதே போல இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் லாபமாக அடுத்த படங்களில் சம்பளம் கணிசமாக ஏறியுள்ளது. திரையரங்கு வருவாய் மூலமாக மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய முதல் சிம்பு படமாக அமைந்துள்ளது.

இதனால் இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் மாநாடு படத்தின் அனைத்து மொழி ரீமேக் உரிமையையும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் தெலுங்கு ரீமேக்குக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில் சிம்பு கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும், எஸ் ஜே சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க ரவி தேஜாவிடமும் பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மாநாடு படத்தின் தமிழ் வடிவத்திலேயே முதலில் நடிக்க ரவிதேஜாவிடம்தான் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்