ராக்கி படத்தின் தாமதம் மிகுந்த வலியைத் தருகிறது… படத்தொகுப்பாளர் ஆதங்கம்!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (10:48 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி மற்றும் பாரதிராஜா நடித்துள்ள ராக்கி திரைப்படம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி தனது அடுத்த படமாக நடித்து முடித்துள்ள ராக்கி படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இந்த படத்தில் வசந்த்ரவியோடு பாரதிராஜா, ஜெயக்குமார், ரவினா ரவி மற்றும் அஷ்ரப் மல்லிசேரி எனும் மலையாள நடிகர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

2019 ஆம் ஆண்டின் இறுதியிலேயே இந்த படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. ஆனால் கொரோனா தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிலீஸாகாமலேயே முடங்கிக் கிடக்கிறது. இதையடுத்து படத்தை இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ்  நிறுவனத்துக்காக வாங்கினார். ஆனால் அவரிடம் சென்றும் ஆறு மாதங்களாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. இதற்கிடையில் இந்த படத்தின் இயக்குனர் அருண் சாணிக்காயிதம் என்ற தன்னுடைய இரண்டாவது படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்.

இந்நிலையில் ராக்கி படத்தின் படத்தொகுப்பாளர் நாகூரன் ராமச்சந்திரன் தன்னுடைய முகநூல் பதிவில் ராக்கி படம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடப்பது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனது பதிவில் ‘நிறைய சிறிய பட்ஜெட் படங்கள் ரிலிஸ் தேதியை அறிவிக்கிறார்கள். ஆனால் ராக்கி படத்தின் ரிலிஸ் பற்றிய எந்தவொரு அறிகுறியும் இல்லை. காலதாமதம் மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. இவ்வளவு பாதிப்புகளை சந்திக்க தேவையில்லாத சிறப்பான படம். காலம் ஒரு துரோகி’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்