இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'கூலி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், லோகேஷ் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் 'கைதி' படத்தின் அடுத்த பாகத்தை இயக்குகிறார் என்றும், அதுமட்டுமன்றி அருண் மாதேஸ்வரன் இயக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இது ஒருபுறமிருக்க, லோகேஷ் கனகராஜின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சில படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெரிய பொருட்செலவில் 'பென்ஸ்' என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இன்னொரு திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிகர் சூரி நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இந்த புதிய படத்தைத், மலையாளத்தில் 'அங்கமாலி டைரீஸ்' உட்படப்பல வெற்றிப் படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் என்பவர் இயக்கவுள்ளதாகவும், இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே 'மண்டாடி', 'ஏழு கடல் ஏழு மலை' உள்ளிட்ட சிறப்பான படங்களை சூரி கையில் வைத்துள்ள நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் நடிக்க இருப்பதன் மூலம் அவரது மார்க்கெட் உச்சத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.