புதிதாக வெளிவரவுள்ள தனது 'நிகிதா ராய்' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நடிகை சோனாக்ஷி சின்ஹா, பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்திய திரைப்பட துறையில் பாகிஸ்தான் நடிகர்கள் தடை செய்யப்பட்டுள்ளது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீரை நடிகர் தில்ஜித் தோசாஞ்ச் தனது 'சர்தார் ஜி 3' திரைப்படத்தில் நடிக்க வைத்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் நடிகர்கள் மீதான தடை குறித்த விவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியாவிற்குள் தடை செய்யப்பட்டுள்ளது குறித்து சோனாக்ஷி சின்ஹாவிடம் கேட்டபோது, "இந்திய நடிகர்களை பாகிஸ்தானில் வேலை செய்ய அனுமதிக்கிறார்களா? நான் என் நாட்டிற்கு ஆதரவாக நிற்கிறேன். அவர்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் எப்போதும் துணை நிற்பேன்," என்று பதிலளித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்திய திரைப்பட துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் அமைப்பான பெடரேஷன் ஆஃப் வெஸ்டர்ன் இந்தியா சினே எம்ப்ளாயீஸ் பாகிஸ்தான் கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்திருந்தது.
பாகிஸ்தான் கலைஞர்களுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து, பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கானின் 'அபீர் குலால்' திரைப்பட வெளியீடு மே மாதம் நிறுத்தப்பட்டது. தில்ஜித் தோசாஞ்சின் 'சர்தார் ஜி 3' திரைப்படம் சர்ச்சையை தவிர்க்க இந்தியாவில் வெளியாவதை தவிர்த்தது. இந்த திரைப்படம் ஜூன் 27 அன்று வெளிநாடுகளில் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகும்.
சோனாக்ஷியின் 'நிகிதா ராய்' திரைப்படம், அவரது சகோதரர் குஷ் எஸ் சின்ஹா இயக்கிய படம் ஆகும். இந்தப் படத்தில் சோனாக்ஷி சின்ஹா, பரேஷ் ராவல், அர்ஜுன் ராம்பால் மற்றும் சுஹைல் நாயர் ஆகியோர் நடித்துள்ளனர்.