இதையடுத்து அவரின் அடுத்த படமாக மாமன் மே 16 ஆம் தேதி ரிலீஸனது. இந்த படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க சூரியுடன் ஐஸ்வர்யா லஷ்மி, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் மற்றும் லப்பர் பந்து புகழ் ஸ்வாஸிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் சீரான வெற்றியைப் பெற்று தற்போது 30 ஆவது நாளைக் கடந்தும் கணிசமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் படம் குறித்து சூரி பகிர்ந்துள்ள பதிவில் “இன்று நம்ம படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 30வது நாளை எட்டியது! இந்த வெற்றி முழுக்க முழுக்க — உங்கள் அன்புக்கே! வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும் படம் முதல் நாளில் எளிமையாகத் தொடங்கியது. ஆனால், சில நாட்களிலேயே குடும்ப ரசிகர்கள் திரையரங்குகளுக்குள் வந்ததோடு, அது ஒரு பெரும் அலை போல பரவியது.
இன்று 30 நாட்கள் நிறைவடைந்துள்ள இந்த பயணம் — உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் சாத்தியமா? நிச்சயமாக இல்லை! இந்த படம் பிரம்மாண்டமான ஆக்ஷன் படம் இல்லை. இது நம் வாழ்க்கையோடு இணைந்த உறவுகளின் தாக்கமும், சின்னச் சின்ன கனவுகளின் ஓசையும் கொண்ட கதை. அதனால்தான் பலர், “நம்ம வாழ்க்கையைப் போல தான்”, “மனதை தொட்ட படம்” என்ற வார்த்தைகளால் பாராட்டினார்கள். அந்த ஒவ்வொரு வார்த்தையும் என் மனதை நெகிழச்செய்தது. Success meet நடத்தவில்லையா? இல்லை… ஆனால், ஒவ்வொரு நாளும் உங்கள் பாராட்டுகள், சமூக ஊடகப் பதிவுகள் — இதுவே நம்ம உண்மையான வெற்றிக் கொண்டாட்டம்!” எனக் கூறியுள்ளார்.