ஷங்கருக்கு அடுத்து தமிழ் சினிமாவில் சிறந்த கமர்ஷியல் இயக்குனராக உருவாகி வந்தார் முருகதாஸ். அவரின் ரமணா, கஜினி, துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட படங்கள் வணிக ரீதியாக அடைந்த வெற்றி மிகப்பெரியது. ஆனால் அவரின் சமீபத்தையப் படங்களான தர்பார், சிக்கந்தர் என அவரது அடுத்தடுத்த படங்கள் படுதோல்வி அடைந்து அவருக்கு ஒரு சிறு தேக்கநிலையை ஏற்படுத்தியுள்ளன.
இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜமால் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்காகப் படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளில் முருகதாஸ் ஈடுபட்டு வருகிறார்.
விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் என அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்த ஏ ஆர் முருகதாஸ் நான்காவது முறையாக விஜய்யை மீண்டும் இயக்குவதாக இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டு நெல்சன் ஒப்பந்தமாகி பீஸ்ட் படமாக அது உருவானது. இந்நிலையில் ஏன் அந்த படம் நடக்கவில்லை என சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “விஜய் சார்க்கு நான் சொன்ன கதை பிடித்திருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. அப்போது கோவிட் காலம். அதனால் அவர்கள் (தயாரிப்பாளர்கள்) ஒரு வளர்ந்து வரும் இயக்குனரை வைத்து படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்திருக்கலாம். அது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் சொன்ன கதை விஜய் சாருக்குப் பிடித்திருந்தது. இப்போதும் அவரோடு நல்ல நட்பில்தான் உள்ளேன்.” எனக் கூறியுள்ளார்.