மத்திய அரசு சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்திய நிலையில் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீடுகளில் அறுப்பு எரிய வேண்டுமா அல்லது வயிறு எரிய வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை, திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 503 ல், சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. அந்த வாக்குறுதி என்ன ஆச்சு? என பதில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நமது நாடு, ஒட்டு மொத்த சமையல் எரிவாயு பயன்பாட்டில் சுமார் 60%, இறக்குமதியையே சார்ந்துள்ளது. சர்வதேச அளவில், சமையல் எரிவாயு நிர்ணயம் செய்யும் சவுதி ஒப்பந்த விலை, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் $385 ஆக இருந்தது, 2025 பிப்ரவரியில், $629 ஆக, 62% விலை உயர்ந்திருக்கிறது. ஆனால் நமது நாட்டில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ₹200 விலை குறைக்கப்பட்டது. மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம், மகளிர் தினத்தை முன்னிட்டு, மேலும் ₹100 விலை குறைப்பு செய்யப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவிலான சமையல் எரிவாயு விலை உயர்வு, நமது நாட்டு மக்களை பாதிக்காமல், விலை குறைக்கப்பட்டே வந்திருக்கிறதே தவிர அதிகரிக்கப்படவில்லை. கடந்த 2024 ஆம் ஆண்டு முழுவதுமே, சமையல் எரிவாயு விலை, சிலிண்டருக்கு ₹803 ஆகவே இருந்தது. உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ₹300 மானியத்தோடு, சிலிண்டர் விலை ₹503 ஆகவே இருந்து வருகிறது.
உண்மை இப்படி இருக்க, திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 503 ல், சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. அதனைப் பற்றி நான்கு ஆண்டுகளில் ஒரு முறை கூட பேசாமல், தற்போது வந்து நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு முக ஸ்டாலின்.