ஆவின் ஊழியரை பணி நீக்கம் செய்திருப்பது அராஜகத்தின் உச்சம்.! திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்.!!

Senthil Velan
வியாழன், 5 செப்டம்பர் 2024 (14:43 IST)
விடியா ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை ஒடுக்குவதில் மட்டும் சர்வாதிகாரியாக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வந்த நிர்வாக சீர்கேட்டையும் முறைகேடுகளையும் வீடியோவாக வெளியிட்ட ஆவின் ஊழியரையே  தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது கடும் அராஜகத்தின் உச்சம் என்று குறிப்பிட்டுள்ளார். விடியா திமுக அரசின் 40 மாத கால ஆட்சியில் ஆவின் நிறுவனம் படுபாதாளத்திற்கு சென்றுள்ளது என்றும் மிக அத்தியாவசியப் பொருளான பால் வழங்கும் பொது நிறுவனமான ஆவினில் கலப்படம் என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
அதனை ஆவின் ஊழியர் சமூக அக்கறையுடன் வெளிக்கொணர்ந்துள்ள நிலையில், அவர் கூறிய புகாரில் உண்மை உள்ளதா என்று ஆராய்ந்து, தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில், தவறை சுட்டிக்காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அப்பட்டமான சர்வாதிகாரப் போக்கு என்று எடப்பாடி தெரிவித்துள்ளார். இத்தகைய போக்குடைய அரசுகள் இருந்த தடம் தெரியாமல் வீழ்ந்ததற்கு வரலாறு நெடுக சான்றுகள் இருப்பதை இந்த விடியா திமுக அரசு நினைவிற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 
போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கைக் காக்கவும் "சர்வாதிகாரியாக மாறுவேன்" என்று வெறும் கையால் வாள் சுழற்றிய விடியா திமுக முதல்வர், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தனது விடியா ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை ஒடுக்குவதில் மட்டும் சர்வாதிகாரியாக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ALSO READ: யார் குறை சொன்னாலும் தமிழ்நாடு பாடத்திட்டமே சிறந்தது.! ஆளுநருக்கு உதயநிதி பதிலடி.!!
 
உடனடியாக தவறை சுட்டிக் காட்டிய நிறுவன ஊழியரை மீண்டும் பணி அமர்த்தவும், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்