நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரம் என்ற பகுதியில், கோவிந்தராஜ் - பாரதி என்ற தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்தச் சூழலில், கோவிந்தராஜ் சுமார் 20 லட்சம் ரூபாய் கடனில் சிக்கி, அதை திருப்பிச் செலுத்த முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், கோவிந்தராஜ் தனது மனைவி மற்றும் ஆண் குழந்தை படுத்திருந்த அறையைப் பூட்டிவிட்டு, மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று பெண் குழந்தைகளையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். அதன்பின், அவரும் தற்கொலை செய்துகொண்டார். இந்த கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கோவிந்தராஜ் ஆண் குழந்தையை விட்டுவிட்டு, மூன்று பெண் குழந்தைகளை மட்டும் ஏன் கொலை செய்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தக் கொலைகளும், தற்கொலையும் கடன் தொல்லையின் விளைவா அல்லது வேறு ஏதேனும் சமூக, குடும்பப் பிரச்சினைகளின் வெளிப்பாடா என்பது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.