நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சிறுநீரக முறைகேடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், "கிட்னிகள் ஜாக்கிரதை" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பேட்ஜ்களை அணிந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவை கூட்டத்திற்கு வருகை தந்தனர்.
இதற்கிடையில், பாமக பேரவை குழுத் தலைவராக உள்ள ஜி.கே. மணியை நீக்க கோரி, அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து பேரவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று நடந்த விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசு உரிய பாதுகாப்பு வழங்கியிருந்தால் கரூரில் நெரிசல் ஏற்பட்டிருக்காது எனக் குற்றம் சாட்டினார். முதல்வர் மு.க. ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் காரசார விவாதம் மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் சிவசங்கரின் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.