பொதுவாக, பைக்கில் செயின் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் ஆண்களாகவே இருப்பார்கள் என்று கருதப்படும் நிலையில், கோவையில் இரண்டு பெண்கள் பைக்கில் சென்று செயின் பறிப்பு மேற்கொண்டனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவைச் சேர்ந்த 56 வயது பெண், கீதா ரமணி, தனது வீட்டின் அருகே நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென பைக்கில் வந்த இரண்டு பெண்கள் அவரிடம் பேச்சு கொடுத்தனர். பின்னால் அமர்ந்திருந்த பெண், கீதா ரமணியின் தாலி செயினை பறித்து கொண்டு தப்ப முயன்றார்.
சத்தம் கேட்டதும், அவரது கணவர் மற்றும் மகன் ஓடிவந்து இரு பெண்களையும் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் கிருஷ்ணவேணி மற்றும் அபிராமி என தெரியவந்தது.