2026ல் ஆட்சியமைக்க வேண்டுமென்றால் அதிமுக தலைமை மாற்றப்பட வேண்டும்: ஓபிஎஸ் ஆவேசம்

Mahendran
திங்கள், 8 ஜூலை 2024 (10:12 IST)
எடப்பாடி பழனிசாமியிடம் நான் எந்தக் கோரிக்கையும் விடுக்காத நிலையில், என்னைச் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று அவர் சொல்வது ஆணவத்தின் உச்சகட்டம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் 2026ல் ஆட்சியமைக்க வேண்டுமென்றால் அதிமுக  தலைமை மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிவுப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கும் பொய்மையின் மொத்த உருவம் 'துரோகி’ திரு. எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனம்
 
'துரோகம்', 'பொய்மை', 'செய்நன்றி மறத்தல்', 'வன்முறை' ஆகியவற்றின் மொத்த உருவமாக விளங்கும் திரு. எடப்பாடி பழனிசாமி என்னை விசுவாசமற்றவன் என்று பேட்டியளித்திருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது.
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் எந்த அளவிற்கு விசுவாசமாக இருந்தேன் என்பதை மாண்புமிகு அம்மா அவர்களே பல சந்தர்ப்பங்களில் தெரிவித்து இருக்கிறார்கள். என்னுடைய விசுவாசத்திற்கு ஈடாக இராமாயணத்தில் வரும் பரதனை ஒப்பிட்டு பேசிய மாண்புமிகு அம்மா அவர்களின் பேச்சினை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். மாண்புமிகு அம்மா அவர்களே என்னுடைய விசுவாசத்தை இந்த நாட்டிற்கு பறைசாற்றிய நிலையில், அதைப் பற்றி பேச ‘பத்துத் தோல்வி' பழனிசாமிக்கு தகுதியில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் பதவியை கொடுத்தவருக்கு துரோகம், பரிந்துரை செய்தவர்க்கு துரோகம், நான்கு ஆண்டு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவருக்கு துரோகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தவருக்கு துரோகம், என சுயநலத்திற்காக பல துரோகங்களை செய்து கொண்டு வரும் திரு. எடப்பாடி பழனிசாமி என்னுடைய விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர்.
 

மாண்புமிகு அம்மா அவர்கள் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிட்டபோது, மாண்புமிகு அம்மா அவர்களுக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளருக்கு 'தலைமை தேர்தல் முகவராக' நான் செயல்பட்டேன் என்று திரு. எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்து இருக்கிறார். இதற்கு நான் ஏற்கெனவே மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், 'ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும்' என்ற 'கோயபெல்ஸ்' வேலையை செய்கிறார் திரு. எடப்பாடி பழனிச்சாமி. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இதனை ஆதாரத்துடன் நிருபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். இதுநாள் வரை ஆதாரத்தை வெளியிடாத திரு. எடப்பாடி பழனிசாமி, மீண்டும் அதே குற்றச்சாட்டினை என்மீது வைத்திருக்கிறார். தன்னுடைய நடவடிக்கையின்மூலம் தான் ஒரு 'கோயபெல்ஸ்' என்பதை நிருபித்து இருக்கிறார்.
 
அடுத்தபடியாக, 2017 ஆம் ஆண்டு மூன்று சதவிகிதம் ஆதரவு இருந்த எனக்கு 'ஒருங்கிணைப்பாளர்' பதவி தந்ததாகவும், 'துணை முதலமைச்சர்' பதவி தந்ததாகவும் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்து இருக்கிறார். நான் 2017 ஆம் ஆண்டு 'தர்ம யுத்தம்’ நடத்திய காலத்தில் எனக்கு கிட்டத்தட்ட 42 விழுக்காடு மக்கள் ஆதரவு இருந்தது என்பதை பத்திரிகைகள் படம் பிடித்துக் காட்டின. அந்தத் தருணத்தில், நான் எடப்பாடி பழனிசாமியிடம் சென்று எனக்கு ‘ஒருங்கிணைப்பாளர் பதவி அளியுங்கள்', 'துணை முதலமைச்சர் பதவி தாருங்கள்' என்று கேட்கவில்லை.
 
நான், 'தர்ம யுத்தம்' சார்பாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 16-வது முறையாக மாபெரும் கூட்டத்தினை கோயம்புத்தூரில் கூட்டியபோது, அங்கு திரண்டிருந்த கூட்டத்தைக் கண்டு அதிர்ந்து, அதற்கு மறுநாள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த விசுவாசிகளான திரு. எஸ்.பி. வேலுமணியும், திரு. பி. தங்கமணியும், சென்னையில் உள்ள என்னுடைய மகள் வீட்டில் என்னைச் சந்தித்து, நாம் ஒன்று சேர்ந்தால்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலுப் பெறும்; அப்போதுதான் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என்ற கட்சித் தொண்டர்களின் கருத்தினையும், விருப்பத்தினையும் என்னிடம் வெளிப்படுத்தினர். கட்சியின் நலன் கருதி, கழகம் ஒன்றுபட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொண்டேன். நான் போய் பழனிசாமியிடம் எந்தப் பதவியையும் கேட்கவில்லை. இனியும் கேட்கமாட்டேன். திரு. பழனிசாமிதான் தவழ்ந்து, ஊர்ந்து, காலில் விழுந்து பெற்ற முதலமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தூது விட்டார்.
 
திரு. எடப்பாடி பழனிசாமி பதவி வெறி பிடித்தவர், சுயநலவாதி என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தனக்கு பெரும்பான்மை இல்லை என்பதால் எனக்கு தூதுவிட்டார் திரு. எடப்பாடி பழனிச்சாமி. 2016 ஆம் ஆண்டு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் 136 இடங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. மாண்புமிகு அம்மா அவர்கள் தன்னுடைய உடல் நலத்தைக்கூட பொருட்படுத்தாமல், சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்ததன் காரணமாக மாபெரும் வெற்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைத்தது. இந்த வெற்றி மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு கிடைத்த வெற்றி.
 
மாண்புமிகு அம்மா அவர்களின் மறைவிற்குப் பின், சின்னம்மா அவர்களின் தயவால் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட திரு எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, அவருக்கு ஆதரவாக 122 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இந்த 122 சட்டமன்ற உறுப்பினர்களில், 19 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு சில மாதங்கள் கழித்து மேதகு ஆளுநரைச் சந்தித்து, திரு. எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். இதனால், திரு. எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 103-ஆக குறைந்தது. இது தவிர, மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இதையும் சேர்த்தால், திரு. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நூறுக்கும் கீழே சென்று விட்டது. அதே சமயத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 98-ஆக இருந்தது. அதாவது, ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது அப்பொழுது, பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டுமென்று மேதகு ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது தி.மு.க. அந்தச் சமயத்தில் மேதகு ஆளுநர் அவர்கள் பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட்டிருந்தால், திரு எடப்பாடி பழனிசாமியின் முதலமைச்சர் பதவி அன்றைக்கே போயிருக்கும். இந்தச் சிக்கலிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எனக்கு தூதுவிட்டு கெஞ்சியவர் திரு. எடப்பாடி பழனிசாமி.
 
எனக்கு திரு எடப்பாடி பழனிசாமியுடன் சேர விருப்பமில்லை என்றாலும், "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு அம்மா அவர்கள் சொன்ன அந்த வார்த்தைகளை மனதில் நிலைநிறுத்தி மீண்டும் இணைவதற்கு முடிவெடுத்தேன்.
 
என்னிடம் தூது வந்தவர்கள் சொன்னது, கட்சிக்கு நானும், ஆட்சிக்கு திரு எடப்பாடி பழனிசாமியும் என்று கூறினார்கள். நானும் ஒத்துக் கொண்டேன். ஆனால், ஒத்துக் கொண்டதற்கு மாறாக, கையெழுத்திடும் அதிகாரம் உடைய இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தனக்குத் தரப்பட வேண்டுமென்ற நிபந்தனையை விதித்தார் திரு எடப்பாடி பழனிசாமி. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நலன் கருதி நான் அதனை ஏற்றுக் கொண்டேன். இது கட்சியின் மீது எனக்குள்ள விசுவாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு, துணை முதலமைச்சர் பதவியை பொறுத்தவரையில், முதலில் நான் வேண்டாம் என்றுதான் சொன்னேன். 
 
இருப்பினும், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் என்னை டெல்லிக்கு நேரில் அழைத்து வற்புறுத்தியதன் காரணமாக அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டேன்.
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, தேனி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட திரு. ப. ரவீந்திரநாத் அவர்களை மட்டும் நான் வெற்றி பெற வைத்தேன் என்றும், அதே நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கழக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவில்லை என்றும் திரு. எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்திருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு, தேனி தொகுதியில் மட்டும் திரு. ப. ரவீந்திரநாத் அவர்கள் வெற்றி பெற்றதை திரு. எடப்பாடி பழனிசாமியால் ஜீரணிக்க முடியவில்லை. 
 
அதனால்தான் இதுபோன்ற குற்றச்சாட்டினை என்மீது சுமத்தி இருக்கிறார் திரு. எடப்பாடி பழனிசாமி. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு. மாறாக, திரு. ரவீந்திரநாத்தை தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டவர் திரு. எடப்பாடி பழனிசாமி. இருப்பினும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் ஆசியாலும், ஆண்டவனின் அருளாலும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்கள் தேனி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ததன் காரணமாகவும் திரு. ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
 
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று நான் சொன்னதற்குக் காரணம் மக்களுக்கு அதில் சந்தேகம் இருந்ததால்தான். மக்களின் கருத்தைத்தான் நான் பிரதிபலித்தேன். அதேபோல, நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு நான் ஆஜராகவில்லை என்று கூறியிருக்கிறார் திரு. எடப்பாடி பழனிசாமி. இது முற்றிலும் தவறு.
 
முதன் முதலாக எனக்கு 20-12-2018 அன்று நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. இருப்பினும், 19-12-2018 அன்று நடைபெறவிருந்த எய்ம்ஸ் மருத்துவர்களின் விசாரணை 20-12-2018 அன்று மாற்றப்பட்டதால், என்னுடைய விசாரணையை ஆணையமே நிறுத்திவிட்டது. இதனைத் தொடர்ந்து 08-01-2019 அன்று ஆஜராகுமாறு நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் எனக்கு உத்தரவிட்டது. ஆனால், சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்ததால், விசாரணையை தள்ளி வைக்குமாறு என்னுடைய வழக்கறிஞர் மூலம் கோரியிருந்தேன்.
 
 பின்னர் 23-01-2019 அன்று ஆஜராகுமாறு நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டது. அன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றதால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. பின்னர் 29-01-2019 அன்று ஆஜராகுமாறு எனக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இருப்பினும், அப்பல்லோ நிர்வாகம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்ததன் காரணமாக 29-01-2019 ஆம் நாளைய விசாரணை ஒத்திவைக்கப்பட்டு, 19-02-2019 அன்று ஆஜராக உ உத்தரவிடப்பட்டது. 19-02-2019 அன்று நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்ததால், 28-02-2019 அன்று ஒத்திவைக்கப்பட்டது. 
 
பின்னர், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு 26-04-2019 அன்று இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. பிறகு, 2022 ஆம் ஆண்டு இருமுறை நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி என்னுடைய விளக்கத்தை நான் அளித்தேன். இதுதான் உண்மை நிலை. எனவே, பொத்தாம் பொதுவாக நான் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை என்று கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி.
 
மாண்புமிகு அம்மா அவர்களின் மரணம் குறித்த நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பற்றி கருத்து தெரிவிக்கும் திரு. எடப்பாடி பழனிசாமி, கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு குறித்து வாய் திறக்க ஏன் மறுக்கிறார்? கோடநாடு கொலை-கொள்ளை வழக்கினை விரைந்து முடிக்க வேண்டும் என
 
 
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்