கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கோடையை சமாளிக்க தமிழ்நாட்டில் தேவையான மின்சாரம் இருப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் புதிய 7000 மெகாவாட் திறன் கொண்ட வெப்ப மின் நிலையம் உருவாக்கப்பட உள்ளது. கூடுதலாக, 14,000 மெகாவாட் மின் உற்பத்தி மற்றும் 2,000 மெகாவாட் பேட்டரி மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால், 2030 வரை மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சில இடங்களில் பழுது உள்ளிட்ட காரணங்களால் மின்விநியோகம் தடைப்பட்டாலும், அவை உடனே சரிசெய்யப்படும். பொதுமக்கள் தக்க நேரத்தில் புகார் தெரிவித்தால், மின்சார வாரிய ஊழியர்கள் உடனடியாக வந்து நடவடிக்கை எடுப்பார்கள். இதற்காக விசேஷ மின்தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிலர் தமிழக அரசை குற்றம் சொல்ல எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மின்சாரக் குறைபாடு இல்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மின் உற்பத்தியில் தமிழ்நாடு தன்னிறைவு பெறும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். விரைவில் தமிழகத்தை மின் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக மாற்ற அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.