பேரணியில் கலந்து கொண்ட 84 வயது முதியவருக்கு மரியாதை செய்த முக ஸ்டாலின்!

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (21:47 IST)
திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நேற்று திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ஒன்று சென்னையில் மிக சிறப்பாக நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டிருந்த போதிலும் ஒரு சிறு சலசலப்பு கூட இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது 
 
இந்த நிலையில் இந்த பேரணியில் 84 வயது நாராயணப்பா என்ற முதியவர் கலந்து கொண்டிருந்தார் என்பதும் இவர் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அந்த முதியவரை நேரில் அழைத்து கவுரவப்படுத்த முடிவு செய்து அவருக்கு அழைப்பு விடுத்தார். முக ஸ்டாலின் அவர்களின் அழைப்பை ஏற்று சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு இன்று வந்த நாராயணப்பா என்ற முதியவருக்கு தகுந்த மரியாதை செய்து அவரிடம் சில நிமிடங்கள் முக ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தார். இந்த சந்திப்பின்போது டிஆர் பாலு, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி உட்பட திமுகவின் முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது முதியவர் உடனான சந்திப்பு குறித்து மு க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
 
முதுமை உடலுக்குத்தான், உள்ளம் என்றும் இளமையுடன் இயக்கத்திற்காக இயங்கும் எனும் வகையில், குடியுரிமை சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற ஓசூரின் 84வயது பெரியவர் நாராயணப்பாவிற்கு நினைவுப் பரிசு வழங்கி மகிழ்ந்தேன். அவரது கைகளைப் பற்றிய போது, கழகம் எனும் பேரியக்கத்தின் வேர்களைத் தொட்ட உணர்வு!

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்