பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சமையல் எண்ணெய் விநியோகித்த வகையில், தமிழக அரசு தங்களுக்கு ரூ.141.22 கோடி செலுத்த வேண்டும் என்று கே.டி.வி. நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது. ஒப்பந்தப்படி 30 நாட்களுக்குள் வழங்க வேண்டிய இந்த தொகை, தற்போது ரூ.200 கோடிக்கு மேல் நிலுவையில் இருப்பதாக நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், இந்த நிலுவை தொகையை வழங்காமலேயே அரசு புதிய ஒப்பந்தப்புள்ளிகளை கோரி வருவதாகவும் குற்றம்சாட்டியது.
வழக்கை விசாரித்த நீதிபதி, "கடந்த இரு வாரங்களாகவே ஓய்வூதிய பலன்கள் மற்றும் அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகைகள் தொடர்பான பல வழக்குகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் என்ன நடக்கிறது? அரசு ஒரு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும். இதுபோன்ற தொகைகளை வழங்காமல் இருப்பது எதை காட்டுகிறது? இந்த தொகைகளை வழங்க வேண்டாம் என்று அரசு முடிவு செய்துவிட்டதா? அல்லது மாநிலத்தில் கடும் நிதி நெருக்கடி நிலவுகிறதா?" என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
இறுதியாக, மனுதாரருக்கு செலுத்த வேண்டிய தொகை குறித்து அரசின் கருத்தை தெரிவிக்குமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இச்சம்பவம் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து பொதுவெளியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.