இந்த ஆண்டு மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால், ஆசை ஆசையாக வளர்த்த மாமரங்களை விவசாயிகள் வெட்டி அழிப்பதாகவும், அதில் வேறு விவசாயம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், ஒரு கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவாகவே விற்பனையாகி வருகிறது. இதே போன்ற பிரச்சனை ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்டபோது, அங்குள்ள அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு மானியம் வழங்கி வருகிறது. ஆனால், தமிழகத்தில் விவசாயிகளின் குரலுக்கு தமிழக அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை என விவசாயிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, மாம்பழ உற்பத்தி செய்யும் விவசாயிகள் பருவநிலை மாற்றம், நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல் எனப் பல்வேறு இன்னல்களை சந்தித்து மாம்பழங்களை விவசாயம் செய்து வரும் நிலையில், தற்போது உரிய விலை கிடைக்கவில்லை என்பதால் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.