கொடிக்கம்பங்களுக்கு மாத வாடகை.. அரசியல் கூட்டங்களுக்கு கட்டணம்.. நீதிமன்றம் அதிரடி..!

Mahendran

புதன், 18 ஜூன் 2025 (17:44 IST)
பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் நட்டால் அதற்கு மாத வாடகை வசூலிக்கப்பட வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் பொது இடங்களில் கூட்டம் நடத்தினால் அதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது, இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
காவல்துறை அனுமதி இல்லாமல் தமிழகத்தில் பல கொடிக் கம்பங்கள் சாலை ஓரத்தில் நடப்படுவதால் சர்ச்சை நிலவி வருகிறது. இதுகுறித்த ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது இடங்களில் நடப்படும் கொடிக் கம்பங்களுக்கு மாத வாடகையாக ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில், சாலை நடுவில் அமைந்துள்ள தடுப்புகளில் கொடிக்கம்பங்கள் நட அனுமதிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 
மேலும், பொது இடங்களில் நடைபெறும் அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கும் வாடகை வசூலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொடிக்கம்பங்களுக்கு மாத வாடகை மற்றும் அரசியல் கூட்டங்களுக்குக் கட்டணம் என்ற நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தல்கள் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்