தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி..!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (07:59 IST)
கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டிய நிலையில் அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
 
தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத திரு. அண்ணாமலை அவர்கள், தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார் என்று கனிமொழி எம்பி தனது டுவிட்டரில் கூறியதை அடுத்து அண்ணாமலை கூறிய பதில் இதோ: 
 
அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை சகோதரி கனிமொழி அவர்களே. ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியை தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் திரு ஈஸ்வரப்பா அவர்கள் சுட்டிக் காட்டினார். நமது தேசியக் கொடியை ஏற்றிய பின் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா? 
 
"கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்" என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது. தமிழ் மக்களை, உங்களிடமிருந்தும் திமுகவினரின் மலிவான அரசியலிலிருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி.  கவலை வேண்டாம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்