முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

Siva

ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (16:29 IST)
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான மறைந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் நினைவஞ்சலி கூடுகை, பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி எதிரே உள்ள ஒரு தனியார் மகாலில் இன்று நடைபெற்றது.
 
நிகழ்ச்சிக்கு ம.தி.தா. இந்து கல்லூரி முன்னாள் முதல்வர் பொன்னுராஜ் தலைமை தாங்கினார். முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளர் வண்ணமுத்து வரவேற்றார்.
 
சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு, எழுத்தாளர் நாறும்பூநாதன் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
இதை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: "கவர்னரால் நிறைவேற்றப்படாத மசோதாக்கள், சுப்ரீம் கோர்ட்டு அறிவுரைப்படி எப்படி நிறைவேற்றப்பட்டதோ, அதேபோல் நீட் தேர்வை ஒழிப்பது குறித்த மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் கொண்டு செல்லப்பட்டு, நீட்டை ஒழிக்க நல்ல முடிவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றுத் தருவார்.
 
மத்திய அரசின் சில பல்கலைக்கழகங்களில் நீட் விலக்கு உள்ளது. அதுபோல், தமிழகத்திலும் நீட் விலக்கை முதலமைச்சர் போராடி கொண்டு வருவார். 
 
தமிழக பா.ஜ.க. தலைவராக நெல்லை மண்ணைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தேர்வாகி உள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்."
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்